தமிழ்நாடு
சென்னையில் இன்று 400 முகாம்களில் தடுப்பூசி மையம்: உங்கள் பகுதியில் எங்கே?
சென்னையில் இன்று ஒருநாள் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த போதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னை மாநகராட்சி எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக இன்று சென்னையில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒரு வார்டுக்கு இரண்டு சிறப்பு முகாம்கள் என்ற வகையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 400 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள 200 வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், விடுதிகள், வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் பகுதியில் தடுப்பூசி முகாம் எங்கே அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp/ என்ற இணையதளத்திற்கு சென்றால் அனைத்து விபரங்களையும் அதில் தெரிந்து கொள்ளலாம் என்று மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 400 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளதால் சென்னை மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.