இந்தியா
மீட்பு பணியில் விபரீதம்: வேடிக்கை பார்த்த 40 பேர் கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு!
மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கிணற்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்த விபரீத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா என்ற மாவட்டத்தில் 8 வயது சிறுமி திடீரென கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்
அப்போது அந்த கிராமத்து மக்கள் மீட்பு பணியை வேடிக்கை பார்ப்பதற்காக கிணற்றின் சுற்றுச் சுவரில் கூடினர். அப்போது பொதுமக்களின் பாரம் தாங்காமல் திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் வேடிக்கை பார்த்த 40க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் 2 பேர் பலியாகி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 16 பேர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும் மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச கல்வி அமைச்சருமான விஸ்வாஸ் சரங் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டறிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன