இந்தியா
அரசு கொடுத்த மானிய தொகை.. கள்ளக்காதலர்களுடன் ஓடிய 4 பெண்கள்: பரிதாபத்தில் கணவர்கள்..!
மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்பதும் இந்த திட்டம் வீடு கட்டுவதற்காக மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின்படி வீட்டின் உரிமையாளராக குடும்ப தலைவி இருக்க வேண்டும் என்பதும் அவருடைய வங்கி கணக்கில்தான் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் பணம் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டுவதோ குடும்பத் தலைவியின் பெயரில் தான் இருக்க வேண்டும் என்றும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நான்கு பெண்கள் தங்கள் வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு முதல் கட்டமாக ரூபாய் 50,000 மானிய பணம் வங்கி கணக்கிற்கு கிடைத்தது. இந்த பணம் கிடைத்தவுடன் அந்த நான்கு பெண்களும் பணத்தை எடுத்துக்கொண்டு தங்களுடைய காதலர்களுடன் கணவரை அம்போ என விட்டு விட்டு ஓடி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காதலர்களுடன் அந்த நான்கு பெண்கள் சென்ற நிலையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே மனைவிகள் ஓடி விட்ட கவலையில் இருக்கும் கணவர்கள் கூடுதலாக அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மானியத்தொகை பெற்றவுடன் அடுத்த சில நாட்களுக்கு வீட்டின் பணியை தொடங்க வேண்டும் என்பது விதி என்பதால் ஏன் இன்னும் வீட்டுக்கு பணியை தொடங்கவில்லை என அரசு அதிகாரிகள் கணவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அரசு அதிகாரிகளை சந்தித்த நான்கு கணவர்களும் தங்கள் மனைவிமார்கள் பணத்துடன் காதலர்களுடன் ஓடிவிட்டார்கள் என்று கூறியதை அடுத்து அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து காவலர்கள் அந்த நான்கு பெண்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் கிடைத்தவுடன் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கணவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த வினோதமான சம்பவம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் பரபரப்புடன் உள்ளனர்.