பர்சனல் ஃபினான்ஸ்
ஜூன் 30-ம் தேதிக்குள் நீங்கள் கண்டிப்பாக இதையெல்லாம் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிதியாண்டு முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த பணிகளுக்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜூன் 30-ம் தேதிக்குள் நீங்கள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த 4 முக்கிய பணிகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
வரி சேமிப்பு முதலீடுகள்
2019-2020-ம் நிதியாண்டுக்கான வரி சேமிக்கும் முதலீடுகளை இதுவரை செய்யாமல் இருந்தாலும் ஜூன் 30-க்குள் அந்த முதலீடுகளைச் செய்ய முடியும். இது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரித் துறை நீட்டித்து வெளியிட்டுள்ள அறிவிப்பாகம். இதனால் வருமான வரி செலுத்துபவர்களுக்கு அதைச் சேமிக்கக் கூடுதலாக மூன்று மாதங்கள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி
2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரியை இதுவரை செலுத்தாதவர்கள் மார்ச் 2020 முடிவதற்குள் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கும் இப்போது ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே சென்ற ஆண்டு தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரியை ஜூன் 30-க்குள் செலுத்தலாம். ஆனால் அபராதம் கண்டிப்பாக உண்டு.
சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தல்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் சென்ற நிதியாண்டுக்கான வரும வரியில் சிறிதளவைச் சேமிக்க முடியும். இந்த திட்டங்களில் குறைந்தது மாதத்திற்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த 1,50,000 ரூபாய்க்கு வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும் என்றால் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்து வருமான வரியை குறைக்கலாம்.
பான் கார்டு – ஆதார் எண் இணைப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லை என்றால் பான் கார்டு செயல்படாது. பான் கார்டு செயல்படவில்லை என்றால் உங்கள் பெயரில் நிறுவனங்கள் பிடித்தும் செய்யும் வரியை உங்கள் கணக்கில் செலுத்த முடியாமல் போய்விடும். இதனால் உங்கள் பெயரில் பிடித்தம் செய்த வரி பணத்தை, வருமான வரி வரம்பிற்குள் இருந்தாலும் திரும்பப் பெற முடியாமல் போய்விடும்.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள நிதி சார்ந்த பணிகளைக் கவனமாக ஜூன் 30-ம் தேதிக்குள் செய்வது நல்லது.