தமிழ்நாடு
தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு 365 புத்தகங்கள் மொழிமாற்றம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி முடிவில் 365 தமிழ் புத்தகங்கள் பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய 18 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், சென்னை பள்ளிக் கல்வித் துறை சார்பாகச் சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அதில் 30 நாடுகளின் புத்தகங்கள் இடம்பெற்றன.
இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி தமிழ் புத்தகங்களைப் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யவும், பிற மொழி புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யும் நோக்கிலும் தொடங்கப்பட்டது.
அதன் இறுதியில் 365 தமிழ் புத்தகங்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற மொழி புத்தகங்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்காக 3 கோடி ரூபாய் நிதியைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தரமான புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் போது, அது தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தும். புதிய சொற்களை உருவாக்க வழிவகுக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.