இந்தியா
ஹிண்டன்பர்க் அறிக்கை.. 3 வாரத்தில் அதானி இழந்த சொத்துக்கள் எவ்வளவு?
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்தன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி மூன்று வாரங்கள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் இந்த மூன்று வாரங்களில் அதானி கிட்டத்தட்ட ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக தனது சொத்துக்களை இழந்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குச் சந்தையில் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூன்று வாரங்களில், அதானி குழுமப் பங்குகள் பெரும்பாலான நாட்களில் அதிக அளவில் சரிந்தன என்றும், சரிவு இந்த வாரத்திலும் விதிவிலக்கல்ல என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்த சரிவு காரணமாக ஜனவரி 24 முதல் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது.
கடந்த திங்களன்று அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேலும் 7% சரிந்தது. அதேபோல் அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவை 5% வரை குறைந்தன. அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் 5.2% சரிந்தன. , அதே நேரத்தில் ACC 10 பங்குகளில் (-3.1%) மிகக்குறைந்ததை இழந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அதானி குழுமத்தின் மொத்த நஷ்டம் ரூ.10. 2 லட்சம் கோடி என தெரிகிறது. ஜனவரி 24 அன்று வர்த்தகத்தின் முடிவில் ரூ. 19. 2 லட்சம் கோடி என இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு கடந்த திங்கள் அன்று சந்தை முடியும்போது ரூ.9 லட்சம் கோடிக்கும் சற்று குறைவாக இருந்தது.
ஆனால் இதுகுறித்து அதானி செய்தித் தொடர்பாளர் கூறியபோது,ம் ‘எங்களிடம் தொழில்துறையில் முன்னணி வளர்ச்சி திறன்கள், வலுவான கார்ப்பரேட் நிர்வாகம், பாதுகாப்பான சொத்துக்கள், வலுவான பணப்புழக்கம் மற்றும் எங்கள் வணிகத் திட்டத்திற்கு முழு நிதியுதவி உள்ளது. தற்போதைய சந்தை நிலைபெற்றவுடன், எங்களுடைய ஒவ்வொரு நிறுவனமும் அதன் சொந்த மூலதனச் சந்தை திரும்ப பெறும். பங்குதாரர்களுக்கு சிறந்த வருவாயை வழங்க எங்கள் போர்ட்ஃபோலியோவின் தொடர்ச்சியான திறனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.