தமிழ்நாடு
பிறந்த பச்சிளங்குழந்தை கடத்தல்: ஒரே நாளில் மீட்ட போலீஸார்!
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தையை தஞ்சை போலீசார் ஒரே நாளில் மீட்டுள்ளனர்
தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் பெண் ஒருவர் ராஜலட்சுமி உடன் அன்பாக பழகி அவருக்கு சில உதவிகளையும் செய்து உள்ளார்
இதனை அடுத்து அந்த பெண்ணை நம்பிய ராஜலட்சுமி, குழந்தையை அவரிடம் கொடுத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது குழந்தையையும் அந்த பெண்ணையும் காணவில்லை என்றதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது
காவல்துறையினர் மருத்துவமனை மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்தப் பெண் குழந்தையை ஒரு கட்டை பையில் போட்டு மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆட்டோவில் ஏறி சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது அந்த பெண் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியதாகவும் அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்சில் பேருந்தில் சென்றதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து பட்டுக்கோட்டைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மேலும் பல குழந்தைகளை அந்த பெண் கடத்தி உள்ளாரா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது
பிறந்து மூன்று நாள் ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு ஒரே நாளில் குழந்தையை மீட்டதற்கு அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.