கிரிக்கெட்
இந்தியாவை சோதிக்கும் மழை: கைவிடப்பட்ட டி20 போட்டி!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று இருபது ஓவர் போட்டி, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
முதல் இருபது ஓவர் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இந்நிலையில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் 19 ஓவராக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை இந்திய அணி எளிதாகும் அடைந்து வெற்றிபெற களத்தில் இறங்க தயாராக இருந்தது. ஆனால் மழை விடாமல் பெய்துகொண்டே இருந்தது. இதனால் இந்தியாவின் வெற்றி இலக்கு மீண்டும் 11 ஓவர்களில் 90 ரன் அடிக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டது.
ஆனாலும் மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.