தமிழ்நாடு
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி: 2512 ரெளடிகள் கைது!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திடீரென ரவுடிகள் வீட்டில் சோதனை செய்யப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகம் முழுவதும் 2512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில் குற்றங்களை தடுப்பதற்காக அதிரடியாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களில் செய்யப்பட்ட இந்த சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அரிவாள்கள் உள்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் போலீசார் இரவு பகலாக மேற்கொண்ட வேட்டையில் இந்த கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் 450 ரெளடிகள் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் 2-வது நாளில் அதிரடியாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது காவல்துறையின் வேட்டை சுறுசுறுப்பாகி உள்ளது என்பது தெரிய வருகிறது. இன்னும் ஒரு சில ரவுடிகள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களையும் பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட 2512 ரவுடிகளில் ஒரு சிலர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் என்பதும் தெரியவந்துள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவால் ரவுடிகள் கைது செய்யப்பட்டது அப்பாவி பொதுமக்களுக்கு மன நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.