இந்தியா
20,000 கோடி ரூபாய் பினாமி பணம்… பிரதமர் மோடிக்கு ஏன் இந்த அதீத பயம்? ராகுல் காந்தி சாடல்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தமானது என சீனா நீண்ட காலமாக இந்தியாவை சீண்டி வருகிறது. தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி வரைபடத்தை வெளியிட்டு மீண்டும் இந்தியாவை சீண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான் என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது சீனா. இதற்கு இந்தியா தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், 2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? அதானியின் ஷெல் நிறுவனங்களில் உள்ள 20,000 கோடி ரூபாய் பினாமி பணம் யாருடையது? என்பது குறித்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.