தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா – முதல்வர் பழனிசாமியின் ‘வாவ்’ அறிவிப்பு!

Published

on

இனி தமிழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் எடுத்து வருகின்றன. அடுத்த சில மாதங்களுக்கும் இந்த ஆன்லை வகுப்பு நடைமுறைகள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏதுவாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள இந்த 2 ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட உள்ளது.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணையவழி ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டுகள்) வழங்கப்படும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

seithichurul

Trending

Exit mobile version