தமிழ்நாடு
19 வயது இளைஞரின் வக்கிரம்: குழந்தை பெற்ற 16 வயது சிறுமி!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மெய்யாத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அருகில் உள்ள விளாத்தூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான ராகுல் என்ற இளைஞர் கர்ப்பமாக்கிவிட்டு சேர்ந்துவாழ மறுப்பு தெரிவித்து சிறைக்கு சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியும், அந்த இளைஞரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். சிறுமியிடம் தொலைப்பேசி மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட அந்த இளைஞன் காதலிப்பதாக கூறி கல்யாணம் செய்துகொள்வேன் என ஆசை வார்த்தைகளை சொல்லி மாணவியுடன் வலுக்கட்டாயமாக தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளான்.
கணவரை இழந்ததால் மாணவியின் தாய் தனது இரு மகள்களையும் ஊரில் தங்க வைத்துவிட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பலமுறை மாணவியை ஏமாற்றி உடலுறவு செய்து வந்துள்ளார் அந்த இளைஞன். இதனால் மாணவி கர்ப்பமாக, இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என மீண்டும் ஆசை வார்த்தை கூறி பல முறை மாணவியுடன் உடலுறவு மேற்கொண்டுள்ளான் அந்த இளைஞன்.
மாணவியும் பயந்து இதனை தனது தாயிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி வயிற்றுவலி அதிகமாக தனது உறவு முறை பாட்டி ஒருவரிடம் விஷயத்தை சொல்லி ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் மாணவி. ஆனால் ஆட்டோவில் செல்லும் போது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்து உடனடியாக ஊருக்கு வந்த மாணவியின் தாய் தனது மகளை அந்த இளைஞனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்த இளைஞன் காவல்துறை விசாரணையில் நான் அவளுடன் குடும்பம் நடத்த மாட்டேன், ஜெயிலுக்கு செல்கிறேன் என கூறியுள்ளான். அவள் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் அவளை வீட்டில் யாரும் ஏத்துக்கமாட்டாங்க என கூறி உள்ளான். இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞன் சிறைக்கு சென்றுள்ளான். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தற்போது மாதர் சங்கம் களம் இறங்கியுள்ளது.