தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 15% கூடுதலாக பெய்துள்ள கோடை மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஆச்சரியப்படும் வகையில் 1653% அதிகமாக கோடைமழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை மழை

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது. மேலும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் கோடை காலமாக இருக்கும். இந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இருப்பினும் வெப்பச்சலனம் மற்றும் காற்று திசை வேக மாறுபாடு உள்ளிட்ட சில காரணங்களால் கோடை காலத்தில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழையளவு அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், வழக்கமாக பதிவாகும் 14.5 மி.மீ கோடை மழையின் அளவை விடவும், இந்த ஆண்டு அதிகமாக 16.7 மி.மீ அளவு பெய்துள்ளது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கோடை மழை 1653% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் எப்போதும் வழக்கமாக 3.2 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 686% கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வழக்கமாக 5 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 39.3 மி.மீ. கோடை மழை பதிவாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் வழக்கமாக 5.5 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 35.6% கோடை மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விடவும் 546% அதிகமாகும். தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், கூடுதலாக கோடை மழை பெய்திருப்பது தண்ணீர்த் தட்டுப்பாட்டை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version