தமிழ்நாடு
உச்சநீதிமன்ற பகுதியில் பதற்றம்: 144 தடை உத்தரவு அமல்!
டெல்லியில் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்றத்தால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய 35 வயதான பெண் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். நாட்டின் தலைமை நீதிபதி மீதே பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அனைத்து ஊடகங்களிலும் முக்கியச்செய்தியாக உருவெடுத்தது.
இதனையடுத்து தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி பாப்டே தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணைக்கு குற்றம் சுமத்திய அந்த பெண் ஒத்துழைக்காததாலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாததாலும் அந்த பாலியல் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது அந்த விசாரணை குழு.
இந்த சூழ்நிலையில் விசாரணை குழுவின் இந்த முடிவை எதிர்த்து பெண் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் உச்சநீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.