இந்தியா
அதிகரிக்கும் ஓமைக்ரான்… இந்தியாவில் மீண்டும் 144 தடை உத்தரவு?…
கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமுல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், கூட்டம் கூடுவதை தவிர்க்க, 144 தடை உத்தரவுகளை கூட, மாநில அரசுகள் பிறப்பிக்கலாம் எனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், தேவைப்படுமானால் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம் எனவும், ஒவ்வொரு மாநிலமும், தங்கள் பகுதிகளில் சூழலுக்கு ஏற்ப பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் எனவும், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.