தமிழ்நாடு
தஞ்சை பள்ளிகளில் கொரோனா: மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு
![corona virus - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/corona-virus.jpg)
கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் 8ஆம் தேதி தஞ்சை அம்மாபேட்டையில் உள்ள பள்ளியில் 58 மாணவிகளுக்கும் ஒரு ஆசிரியருக்கும் கொரோனா பரவியது. மேலும் அந்த மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கும் கொரோனா பரவியது.
அதேபோல் மார்ச் 13-ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா. பரவியது. மார்ச் 18ஆம் தேதி மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் படித்து கொண்டிருந்த 26 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் தஞ்சை கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 7 மாணவிகளுக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை பகுதியில் மட்டும் மொத்தம் 142 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பணிக்காக அவர் தஞ்சை சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவரது மனைவிக்கு சோதனை செய்த போது அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.