உலகம்
தாய் உள்பட குடும்பத்தையே சுட்டு கொன்ற 14 வயது சிறுவன்: அதிர்ச்சி காரணம்!
தாய் உள்பட தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் 14 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பப்ஜி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி உள்ளனர் என்பதும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் தற்கொலை மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகி உள்ளனர் என்பதும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பப்ஜி விளையாடியதை கண்டித்த தாய் மற்றும் தனது குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் சிறுவன் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியை சேர்ந்த முபாரக் என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அந்த குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் தான் கொலையாளி என்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அந்த சிறுவனிடம் விசாரணை செய்தபோது பப்ஜி விளையாடுவதை தனது தாய் உள்பட குடும்ப உறுப்பினர்கள் தட்டி கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த தான் அனைவரையும் சுட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
சிறுவன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக அவரது தாய் வாங்கி வைத்திருந்த நிலையில் அந்தத் துப்பாக்கியே அவரது குடும்பத்தினர் அனைவரையும் பலிவாங்கிவிட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.