தமிழ்நாடு
செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் 13 பேர் பலியா?- கலெக்டர் விளக்கம்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக 13 பேர் இறந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு, செயற்கையாக ப்யூர் ஆக்ஸிஜன் தேவை என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இந்த ஆக்ஸிஜன் சப்ளை கிடைக்காமல் பல்லாயிரம் மக்கள் தினம் தினம் இறந்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் இப்படியான ஆக்ஸிஜன் சப்ளைக்குப் பற்றாக்குறை இருக்கவில்லை என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், ‘நேற்றிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் சப்ளை இருந்தது. ஆனால், அதை நோயாளிகளுக்கு கொடுப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன. அந்த நேரத்தில் 13 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு மட்டும் தான் கொரோனா தொற்று இருந்தது. மற்றவர்களுக்கு நெகட்டிவ் தான் இருந்தது. அவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.