இந்தியா
இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் ஒமிக்ரான் அலை ஆகியவை பரவும் போது ஒவ்வொரு முறையும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவது வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை என்பதால் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று பரவிக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பயணம் செய்த 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் வந்த விமானத்தில் மொத்தம் 179 பயணிகள் பயணம் செய்தனர். அதில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பரவியது டெல்டா தொற்றா? அல்லது ஒமிக்ரான் தொற்றா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒமிக்ரான் பரவ ஆரம்பித்ததுமே பல்வேறு நாடுகள் வெளிநாட்டு விமான சேவையை நிறுத்தி விட்ட நிலையில் இந்தியா இன்னும் சிறப்பு விமானங்களை இயக்கி வருவதால்தான் இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இனிமேலாவது உடனடியாக அனைத்து வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.