தமிழ்நாடு
4 நாட்கள் தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழ் புத்தாண்டை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை வருவதையடுத்து சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதை அடுத்து இன்று முதல் சென்னையில் உள்ள தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்ல உள்ளனர்.
அவர்களின் வசதிக்காக இன்றும் நாளையும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து கோவை, சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர், செங்கோட்டை, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
அதேபோல் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.