தமிழ்நாடு
ஒன்றல்ல, இரண்டல்ல, 100 வகை இட்லி: கோவை கேட்டரிங் மாணவர்கள் அசத்தல்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இட்லி தினம் முன்னிட்டு கோவையில் உள்ள கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் 100 வகையான இட்லி செய்து காட்சிப்படுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியமான தானியங்களால் ஆன இட்லி, பருப்பு இட்லி, தயிர் இட்லி, ரொட்டி இட்லி, ஆப்பிள் இட்லி, மல்லி இட்லி, குல்பி இட்லி, சிக்கன் இட்லி உள்ளிட்ட வகைவகையான இட்லிகளும் அதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய், வெங்காயம், மாங்காய் உள்ளிட்ட சட்னிகளும் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதனை பார்த்து பார்வையாளர்கள் அசந்துபோய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கேட்டரிங் மாணவர் ஒருவர் கூறியபோது, ‘இட்லி என்பது ஒரு ஆரோக்கியமான உணவு. எனவே இட்லியை அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக விதவிதமான இட்லியை நாங்கள் இங்கே காட்சிப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
அதேபோல் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் பர்கர் இட்லி, பீட்சா இட்லி ஆகியவையும் செய்துள்ளோம். இட்லியை எதற்காக பல விதங்களில் செய்யக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த இட்லி கண்காட்சி என்றும் குழந்தையை கவர வேண்டுமென்டும் என்பதற்காக கேக் இட்லி, சாக்லேட் இட்லியும் செய்துள்ளோம் என்றும் கேட்டரிங் மாணவர்கள் கூறியுள்ளனர் .
அதேபோல் சர்க்கரை நோயாளிகளுக்காக கம்பு கேழ்வரகு ஆகியவற்றிலும் இட்லி செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள். இந்த கண்காட்சிக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை வந்து இட்லியை பார்த்து ரசித்து சாப்பிட்டு வருகின்றனர்.