தமிழ்நாடு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் தகுதி எடப்பாடி அரசுக்கு உண்டா?
![ja - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/02/ja.png)
பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள தமிழக அரசு எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இனி ஆண்டுதோறும் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிறந்த, பிப்ரவரி 24ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கடந்த வாரம் அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பினால் மட்டும் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்களா? பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கான சமுதாயம் அமைய அரசு செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் ஆண்ட்ரு பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்தாத தமிழக அரசு பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த அறிவிப்பினால் எந்த ஒரு பயனும் இல்லை என்ற நிலையே உள்ளது.
ஒரு பெண் குழந்தையின் பிறப்பு முதல் உணவு, கல்வி, பாதுகாப்பான சூழல் மற்றும் ஆளுமை திறன் ஆகியவை கிடைக்கும் போதுதான் அந்த பெண் குழந்தை பாதுகாக்கப்பட்ட பெண் குழந்தையாக கருதப்படும். அதுமட்டுமின்றி இன்றைய கல்வி சூழலில் பெண் குழந்தைகளின் ஆளுமை திறனை மேம்படுத்த தவறியதோடு மதிப்பெண்களை குறிக்கோளாக வைத்து செயல்படுவதால், பெண் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நவீன வசதிகள் பொருந்திய ஆய்வகங்கள் தமிழகத்தில் போதிய அளவு இல்லை, இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடும் வாய்ப்புகள் உள்ளது.
பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டு தரமான கல்வியை பயின்று பாதுகாப்பான சுற்றுச் சூழலில் வளர்ந்த, ஆளுமை திறன் கொண்டு செயல்பட்டால் ஆரோக்கியமான சமுதாயம் அமையும்.
ஆகையால், அவர்களுக்குத் தேவையான சத்தான உணவு, கல்வி, பாதுகாப்பு இவை அனைத்தையும் உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசு பாதுகாப்பு தினம் என அறிவித்தால் மட்டும் போதாது, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் மூலம் இவற்றை பின்பற்றினாலே பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.