தமிழ்நாடு
நெல்லை, கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்!
நெல்லை மற்றும் கூடங்குளம் பகுதியில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று நேரான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக கடலோரப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.
கூடங்குளம், பெருமணல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வெட்ட வெளியில் இருந்து அச்சத்துடன் நிலத்தை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இருப்பதை அடுத்து அதற்கு ஏதாவது பாதிப்பு வருமா? அல்லது கடலோரப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் சுனாமி பாதிப்பு வருமா? என்பது குறித்து அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சுனாமி குறித்த எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.