உலகம்
கர்ப்பமாக இருந்ததால் வேலையில் இருந்து நீக்கம்.. இழப்பீடு மட்டும் இத்தனை லட்சமா?
ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் ஆனால் அதே நேரத்தில் பெண்கள் கர்ப்பம் ஆனால் அந்த பெண்ணை எப்படியாவது வேலையை விட்டு நீக்குவதில் தான் நிறுவனம் குறியாய் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
பெண்கள் கர்ப்பம் ஆனால் அவர்களுக்கு மகப்பேறு விடுமுறை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமன்றி கர்ப்பமான பிறகு அவர்களிடமிருந்து தேவையான வேலையை வாங்க முடியாது என்பதே பெரும்பாலான நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலுள்ள என்ற எஸ்ஸெக்ஸ் நகரில் ஐடி நிறுவனத்தில் 34 வயது சார்லோஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. மூன்று முறை அவருக்கு கரு கலைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் தனது மேனேஜரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டார். ஆனால் மேனேஜர் நீங்கள் வேலைக்கு சேர்ந்து ஒரு சில மாதங்கள்தான் ஆகிறது என்பதால் மகப்பேறு விடுமுறை உங்களுக்கு பொருந்தாது என்றும் கூறியதோடு அவரை டிஸ்மிஸ் செய்தார்.
இந்த நிலையில் மகப்பேறு விடுமுறை தனக்கு அளிக்காததால் கடும் மன உளைச்சலில் இருந்த சார்லோஸ்-க்கு திடீரென மீண்டும் ஒருமுறை கரு கலைந்துவிட்டது. இதனை அடுத்து தன்னை பணி நீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே 3 முறை கரு கலைந்து இருந்த தனக்கு நான்காவது முறையாக கருகலைய தனது நிறுவனம் தான் காரணம் என்று தொடர்ந்த வழக்கு ஒரு வருடமாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியான நிலையில் கர்ப்பமடைந்த ஒரே காரணத்திற்காக ஒரு பெண் வேலை நீக்கம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிமன்றம் அவருக்கு ரூபாய் 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தும், அந்நிறுவனம் மேல்முறையீடு செய்யாமல் 15 லட்சம் இழப்பீட்டை அந்த பெண்ணுக்கு வழங்கி இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.