தமிழ்நாடு
ஸ்டாலினுக்கு அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை: திருநாவுக்கரசர்!
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுகவுக்கோ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தலைமை உள்ளது. இதனால் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி நூழிலை பெரும்பான்மையில் தற்போது நீடித்து வருகிறது. இதனால் இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க திமுக ரகசியமாக களமிறங்கியதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் அதனையே ஓரங்கட்டும் விதமாக அதிமுக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அதிமுக எம்எல்ஏ எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என கலக குரல் எழுப்பியது அதிமுகவுக்கு உட்கட்சி பூசலாக வெடித்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை தக்கவைக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது, அதிமுகவில் நிலவும் பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்றார் திருநாவுக்கரசர்.