இந்தியா
பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியால் கோடிக்கணக்கில் லாபம்- மத்திய அரசு
![modi mann ki baat - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/modi-mann-ki-baat.jpg)
பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற போது மக்களுடன் கலந்துரையாட ‘மன் கீ பாத்’ என்னும் வானொலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணி அளவில் பிரதமர் மோடி மக்களுடன் கலந்து உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றின் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இதுவரை 78 நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த 78 நிகழ்ச்சிகள் மூலம் மத்திய அரசுக்கு 30.80 கோடி ரூபாய் லாபம் ஆகக் கிடைத்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2014- 15-ம் ஆண்டில் 1.16 கோடி, 2015-16ம் ஆண்டில் 2.81 கோடி ரூபாய், 2016-17ம் ஆண்டில் 5.14 கோடி ரூபாய், 2017- 18ம் ஆண்டில் 10.64 கோடி ரூபாய், 2018-19ம் ஆண்டில் 7.47 கோடி ரூபாய், 2019-20ம் ஆண்டில் 2.56 கோடி ரூபாய் மற்றும் 2020-21ம் ஆண்டில் 1.02 கோடி ரூபாயையும் வருவாய் ஆக மத்திய அரசு ஈட்டியுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.