தமிழ்நாடு
‘தமிழுக்காக அமைச்சகம் உருவாக்குவது நம் கடமை’- கோரிக்கை வைக்கும் மநீம கமல்ஹாசன்
தமிழ் மொழிக்காக ஒரு அமைச்சகம் உருவாக்க வேண்டியது நம் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறை என அமைக்கப்பட்டு அதற்கு மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக இருந்தார். தற்போது இந்தத் துறை பண்பாட்டுத் துறை ஆக மாற்றப்பட்டு இதற்கான அமைச்சராக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பண்பாட்டுத் துறை கூடுதல் பொறுப்பாகவே கொடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் துணையால் தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட தலைவர்களாலேயே நான் தமிழ் மொழி மீது ஈர்க்கப்பட்டு ஹிந்தி மொழி எதிர்பாளன் ஆனேன். ஹிந்தி படங்களில் நடிப்பது தொழில் முறையில். ஆனால், பல மொழிகளில் பணியாற்றிய பின்னர் தான் ‘யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேன்’ என்பதைப் புரிந்து கொண்டேன்.
நாம் ஹிந்தி ஒழிக எனக் கூறினால் மட்டும் போதாது தமிழ் வாழ்க எனக் கூற வேண்டும். அதைச் செயலிலும் காட்ட வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கி அதற்கான வளர்ச்சிக்காக தனியே நிதி ஒதுக்கி செயல்பட வேண்டும் என தாய்மொழி தினத்தில் உருவாக்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.