இந்தியா
கொரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு ரூ.150; மாநில அரசுக்கு ரூ.400 – இதுதான் ‘மோடி கணக்கோ’?
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை விற்பனை செய்வதற்கென விலைப் பட்டியலையும் அறிவித்துவிட்டது. இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஒரு தடுப்பூசி 150 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு ஒரு ஊசி 400 ரூபாய்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு ஊசி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநில அரசு மக்களுக்குத் தருவதை விட மத்திய அரசின் மருத்துவமனைகளிலும் மையங்களிலும் மக்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி குறைந்த விலைக்குக் கிடைக்கும். வெளிநாடுகளில் கொடுக்கப்படும் தடுப்பூசிகளை விட மிகவும் குறைந்த விலையில் இந்தியாவுக்கான தடுப்பூசி உள்ளது என சீரம் நிறுவனம் கூறுகிறது.
அரசு விதிமுறைகளின் அடிப்படையில் சீரம் நிறுவனம் வழங்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்காக ஒதுக்கப்படும். மீதம் இருக்கும் 50 சதவிகிதம் மாநில அரசுகளுக்கும் தனியார் மையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.