கிரிக்கெட்
இளம் வயதிலேயே லெஜெண்ட் ஆன ஒருவர் விராட் கோலி- புகழ்ந்து தள்ளிய யுவராஜ்
![kohli- yuvraj - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/kohli-yuvraj.jpg)
இளம் வயதிலேயே ஒரு லெஜெண்ட் ஆக உருவாகி நிற்பவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த யுவராஜ் சிங் விராட் கோலியின் முன்னேற்றப் பயணம் குறித்து மிகவும் பெருமைபடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஆரம்ப காலத்தில் விராட் கோலி அணிக்குள் அறிமுகமான போது அவருக்கும் ரோஹித்துக்கும் இடையே தான் பெரிய போட்டியே இருந்தது.
அப்போது கோலி அதிக ரன்கள் குவிப்பதிலேயே விளையாடினார். அதனால் தான் அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்தது. அந்த உலகக் கோப்பைப் போட்டிதான் கோலியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. கோலி விளையாடும் போது மட்டுமில்லை பயிற்சி செய்யும் போது கடுமையான உழைப்பை முன் வைப்பார். உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருக்க வேண்டும் என உழைப்பார் கோலி.
அதனாலே அவருக்குக் கேப்டன் பதவி கிடைத்தது. கேப்டன் பதவியால் அவரது பேட்டிங் திறனுக்கும் வேகத்துக்கும் குறைவே ஏற்படவில்லை. கேப்டன் ஆன பின்னர் தான் அவர் இன்னும் அதிக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். பலரும் வயதான காலத்தில் தான் லெஜெண்ட் என்ற நிலையை அடைவர். ஆனால், தன்னுடைய 30-வது வயதிலேயே லெஜெண்ட் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார் விராட் கோலி” எனப் புகழ்ந்து பேசினார்.